ஒரு ஆட்சிக்கு உட்பட்ட பகுதியை "நாடு" என்று சொல்லலாம். சமற்கிருத சொல்லாக மாறிய "தேசம்" என்ற சொல்லும் நாடு என்ற பொருளையே குறிக்கிறது. ஆகவே இந்தியாவை நாடு என்று சொன்னாலும் தேசம் என்று சொன்னாலும் பொருள் ஒன்றே. அதனால்தான் இந்திய தேசம் என்றும் இந்திய தேசியம் என்றும் ஆளும் வகுப்புகள் கூறி வருகின்றன.
ஆனால், இசுடாலின் வரையறையான ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளியல் வாழ்க்கை மற்றும் மனவியல்பு (பண்பாடு) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு முதலாளிய குடியரசுப் புரட்சியின் வெற்றியால் உருவான நாடுகள் புது வகைப்பட்டன. பொதுவாக ஒரு மொழி பேசும் மக்களைக் கொண்டு நாடுகள் உருவாக்கப்பட்டன. மொழியின் பெயராலேயே அந்நாடுகள் அழைக்கப்பட்டன.
பிரெஞ்சு, இங்கிலாந்து, இத்தாலி, செர்மன் போன்ற நாடுகள் மொழியின் பெயரிலேயே உருவாயின. ஆகையால் இந்நாடுகளை "மொழி நாடுகள்" என்று அழைப்பதே சரியானதாக இருக்கும்.
தேசிய இனச் சிக்கல் என்பதை “மொழி நாட்டினச் சிக்கல்’’ என்றும் அவற்றுக்கான இயக்கங்களை “மொழி நாட்டியக்கங்கள்’’ என்றே இந்நூலுள் குறிப்பிடப் படுகின்றது. ஆகையால் இந்த புதிய சொற்களைப் புரிந்து கொண்டு இந்நூலைப் படிக்கவும்.
கடந்த காலங்களில் நடந்த மொழி நாட்டினங்களின் வரலாற்றை முதலில் தெரிந்து கொள்வோம். அதைத் தெரிந்து கொண்டால்தான் இன்றைய காலக் கட்டத்தில் இந்தியாவில் நடைபெறும் மொழி நாட்டினச் சிக்கலை எவ்வாறு அணுகலாம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
மொழி நாட்டினச் சிக்கல் வரலாற்றின் எந்த காலகட்டத்தில் தோன்றுகிறது?
உலகில் உள்ள அனைத்துக் குமுகங்களிலும் வரலாறு ஒரு சுழற்சிப் பாதையில்தான் மாற்றம் காண்கிறது. அதாவது தொல் பொதுவுடைமைக் குமுகாயம், ஆண்டான் அடிமை குமுகாயம், நிலக்கிழமை குமுகாயம், முதலாளியக் குமுகாயம், ஒப்புரவுக் குமுகாயம், பொதுமை குமுகாயம் என்ற வட்டச் சுழற்சிப் பாதையில்தான் இயங்கி வருகின்றது. இந்த சுழற்சி வட்டப் பாதையில் எந்த காலக் கட்டத்தில் மொழி நாட்டுச் சிக்கல் தோன்றுகிறது.
"உலகம் முழுவதும், நிலக்கிழமையை எதிர்த்து முதலாளியத்தின் இறுதி வெற்றியின் காலப் பகுதி மொழி நாட்டின இயக்கங்களுடன் இணைந்துள்ளது." (இலெனின். மொழி நாட்டினச் சிக்கல்களும், தொழிலாளி வகுப்பின் ஓருலகியமும் [சர்வ தேசிய வாதமும்] பக்கம் 76)
"மொழி நாடு என்பது வெறும் வரலாற்று வகையினம் மட்டுமன்று. ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தைச் சேர்ந்த வரலாற்று முறையிலான வகையினம் ஆகும். நிலக்கிழமையை ஒழித்து முதலாளியம் வளர்ந்து வரும் நேரத்தில்தான் மொழியின நாடுகள் உருவாயின. எடுத்துக் காட்டாக இதற்கு ஐரோப்பாவைச் சொல்லலாம். நிலக்கிழமையில் ஏற்பட்ட பிளவை வெற்றிக் கொண்டு முதலாளியம் முன்னேறிய போதுதான் பிரிட்டன், பிரான்சு, செர்மனி, இத்தாலி போன்றவை மொழி நாடுகளாக உருவாயின." (இசுடாலின். மார்க்சியமும், மொழி நாட்டினச் சிக்கலும் - பக்கம் 22)
மேற்கண்ட இலெனின், இசுடாலின் இருவரின் மேற்கோள்களும் நிலக்கிழமையை எதிர்த்து முதலாளியக் குடியரசுப் புரட்சியின் தோற்றுவாயில்தான் மொழி நாடு உருவாக்கம் பெற்றது. முதலாளியப் புரட்சியின் வெற்றியால்தான் பிரான்சு, பிரிட்டன், செருமனி, இத்தாலி போன்ற நாடுகள் தோன்றியன. முதலாளிய மக்களாட்சி தோற்றத்தோடு மொழி நாடுகள் உருவாயின.